அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவுஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்ரேலியாவின் சிட்னியை சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.காணாமல் போயுள்ள தமிழ் இளைஞன் தொடர்பில் தெரியவரும் பட்சத்தில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் Crimestoppers-I 1800 333 000 என்ற இலக்கத்திலோ அல்லது https://nsw.crimestoppers.com.au/ என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் போயுள்ள இளைஞன் தொடர்பாக நியூசவுத் வேல்ஸ் பொலிஸார்வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,‘சக்திவேல் லோகநாதன் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough புகையிரத நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர் தனது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தவில்லை எனவும், எவ்வித தொடர்பாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையிலேயே நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் காணாமல் போயுள்ள தமிழ் இளைஞன் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனவும் பொலிஸாரை மேற்கோள் காட்டி அவுஸ்ரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.