வவுனியா வடக்கு நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் குடிபோதையில் ஆசிரியர்கள் செய்த அமைதியின்மையை அடுத்து 6ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பணத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப்பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
இந் நிலையில் காலையில் பாடசாலைக்கு சென்ற அதிபர் பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்டதுடன் காவலாளியினால் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிபரினால் வலய கல்வவிப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவரால் உத்திரவிடப்பட்ட நிலையில் அதிபரினால் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில் பொலிஸாரினால் விடுதியில் தங்கியிருந்த இ. சந்திரகாசன், எஸ். பிரதீபன், எஸ். தசபுத்திரன், து. திருக்குமரன், எஸ். நிசாந்தன், வினோராஜ் ஆகிய 6 ஆசிரியாகள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு 6 ஆசிரியர்களும் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் நிதுpமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர்களை வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளரே பிணையில் எடுப்பதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வலய கல்விப்பணிப்பாளாரிடம் கேட்டபோது ஆசிரியர்களை பிணையில் எடுப்பதற்கு கையொப்பத்தை தான் இடவில்லை என தெரிவித்தார்.
இதேவேளை வட மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுவதால் வட மாகாண கல்வி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஆவண செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.